பிக் பாஸ் நிகழ்ச்சி இளைஞர்களையும், சிறுவர்களையும், சமுதாய கலாச்சாரத்தையும் சீரழிப்பதாகவும் கூறி, அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் மாநில தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி இளைஞர்களையும், சிறுவர்களையும், சமுதாய கலாச்சாரத்தையும் சீரழிப்பதாகவும், அதனால், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என்று முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி பிரியா, “நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் காரணமாகத்தான் அதிகம் பேர் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆபாச உடைகள், ஒருவர் நான்கு பேரை காதலிக்கும் காட்சிகள் ஆகியவை நமது வீட்டுக்குள் வந்துவிட்டது.
60 ஆண்டுகள் கலைத்துறையில் பணியாற்றி வரும் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் காரணம் என்ன?
சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், உள்ளிட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். அதனால், அவர்கள் மனதில் தீய எண்ணங்கள் பதிக்கப்படுகிறது.
மேலும், நமது கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதால் எங்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த இரண்டு வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று தெரிவித்து வந்தேன். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கூறினேன். தணிக்கைக் குழு இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதை கண்டிக்கிறோம்.
எனவே, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை குழு மூலம் ஒப்புதல் பெறப்பட்டு அதன் பிறகே அந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்று கூறினார்.