சென்னையில் நடிகர் ரஜினி காந்த் அவரது போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவர் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக் குறித்து பேசினார்.
இச்சந்திப்பில், “தமிழர்களின் கோரிக்கை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பில் தேவையில்லாமல் காலத்தை வீணாக்குகிறது மத்திய அரசு. இவ்வாறு தாமதித்தால் அனைத்துத் தமிழக மக்களின் கோபத்திற்கும் மத்திய அரசு ஆளாகும். காலத்தைக் கடத்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் யாருக்காகப் போராட்டங்கள் நடைபெறுகிறது என்று தெரியாமலேயே அனைவரும் போராட்டம் நடத்துகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “40 ஏக்கர் அல்லது 50 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்காகப் போராட்டம் நடைபெறவில்லை. ஒரு ஏக்கர் 2 ஏக்கர் வைத்து விவசாயம் செய்யும் ஏழை விவசாயிகளுக்காக இந்தப் போராட்டம் நடைபெற வேண்டும்.” என்றார்.
ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலைக் குறித்து கேள்வி கேட்டபோது, தமிழகத்தில் காவிரி மற்றும் ஸ்டெர்லைட் என்று தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் நிலவி வரும் வேளையில் சென்னை அணியின் வீரர்கள் தமிழ்நாட்டிற்காக கருப்பு பட்டை அணிந்து போராட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் “மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து பலருக்கு வேலை வாய்ப்பு தரும் எந்த ஆலையும் செயல்படக்கூடாது” என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலை ரஜினிக்கு அளித்த பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார்.
போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த பிறகு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினர் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அவர் கலந்துக்கொண்டார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Rajini addressed media regarding cauvery and sterlite issue