குட்கா ஊழல் குறித்த சிபிஐ ரெய்டு குறித்தும், மாணவி சோபியா விவகாரம் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் நழுவிச் சென்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
குட்கா முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் குட்கா முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடுகளில் நேற்று சோதனை நடந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம் குட்கா முறைகேடு குறித்த சிபிஐ ரெய்டும், அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் அதிகாரிகள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சிறிது யோசித்த அவர் 'இல்லைங்க.. அதுபற்றி கருத்து எதுவும் இல்லை' என்று சிரித்தப்படி கூறினார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை முன்பு பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதாக மாணவி சோபியா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, 'அதற்கும் கருத்து இல்லை' என்றார்.
பின்னர், 'எப்போது அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளீர்கள்?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'இதுப்பற்றி எத்தனையோ தடவை பதில் சொல்லிவிட்டேன்' என்று சிரித்தபடி கடந்து சென்றார்.