கடந்த மார்ச் 10-ம்தேதி இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் புறப்பட்ட ரஜினி, தனது பத்து நாள் பயணத்தை 10 நாட்களில் முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்பினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆன்மிக பயணம் சென்று வந்த பிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து என்னைப் பற்றிய கமல்ஹாசனின் கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது.
சினிமாத்துறையில் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் எப்போதுமே சொல்வேன். ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழகம் மதசார்பற்ற நாடு. மத கலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என் பின்னால் பாஜக இல்லை, என் பின்னால் கடவுளும், மக்களும் தான் இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியே நான் தெளிவாக கூறினேன், நான் இன்னும் அரசியல் குளத்தில் இறங்கவில்லை என்று... இறங்கினால் நீச்சல் அடித்து தான் ஆக வேண்டும். அதுவரை தினம் நடக்கும் விஷயங்களுக்கு பதில் கூற மாட்டேன் என்றும் கூறியுள்ளேன். இன்னும் எத்தனை தடவைதான் நான் இதை சொல்வதென்று தெரியவில்லை.
ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வரும் செய்தியை நான் மறுக்கிறேன்" என ரஜினி பேசியுள்ளார்.