தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த விசாரணைக்கு ஜனவரி 19 ஆம் தேதி ஆஜராக, நடிகர் ரஜினிகாந்த்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த பேரணியின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த நேரில் ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு 10, 000 ரூபாய் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள் தான் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் மேற்கொண்ட புனிதப் போராட்டம் ரத்தக் கறையுடன் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர். ஜெயலலிதா சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். தற்போதைய அரசு அதனைப் பின்பற்ற வேண்டும் " என்று தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேர்களிடம் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருவது தொடர்பாக ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியது.
இதற்கு ரஜினிகாந்த் விசாரணை ஆணையம் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். நேரில் ஆஜராகும்போது ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதால் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்த விசாரணைக்கு ஜனவரி 19 ஆம் தேதி ஆஜராக, நடிகர் ரஜினிகாந்த்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.