ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட விழாவில் , அவரது ரசிகர்கள் அளவுக்கு அதிகமான பேனர்களை வைத்ததால், பொதுமக்களிடன் ரஜினிகாந்த் மேடையில் மன்னிப்புக் கேட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின்பு, நேற்றைய தினம், முதன்முறையாக பொதுவெளியில் ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.
ரஜினியின் வருகையையொட்டி அவரின் ரசிகர்கள் சாலை முழுவதும் பேனர்களால் நிரப்பி இருந்தனர். சிவப்பு கம்பள வரவேற்பு, ஆட்டம், பாட்டம் என அவர் வந்த சாலை முழுவதும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்புகள் அளிக்கப்பட்டன. சிலையை திறந்த வைத்த பின்பு, மேடையில் உரையாற்றிய ரஜினி முதலில், ”என்னை மன்னித்து விடுங்கள் மக்களே” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது ஒரு கல்லூரி விழா போல் இல்லை. என் ரசிகர்கள் இதை ஒரு கட்சி மாநாடு போல் நடத்திவிட்டனர்.வருகிற வழியெங்கும் கட்அவுட் பேனர்கள் என வைத்துவிட்டனர், நான் அதை கவனித்தேன். நீதிமன்றத்தின் உத்தரவை எப்போதும் மீறக்கூடாது. ரசிகர்களே இனி, இனி இவ்வாறு செய்ய வேண்டாம். இந்த பேனர்களால் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.