ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் இன்று ஏ.சி.சண்முகத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ‘ஆண்டவன் அருள் இருந்தால் வெற்றி’ என கூறினார்.
ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை ஏற்கனவே உறுதி செய்துவிட்டார். கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று (ஜூலை 10) இரவில் சென்னைக்கு திரும்பினார்.
ரஜினிகாந்த் பங்கேற்ற விழா
ரஜினிகாந்த் சென்னை திரும்பிய பிறகு முதல் நிகழ்ச்சியாக இன்று(ஜூலை 11) சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு நடந்த பாராட்டு விழா இது!
இந்த விழாவில் படத்திற்காக முகத்தில் வளர்த்த கிருதா தாடியுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். விழாவில் ஏ.சி.சண்முகத்திற்கு நினைவுப் பரிசு வழங்கிய ரஜினிகாந்த், ‘உழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது; ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.’ என்றார். ‘நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்’ என்றும் கூறினார் ரஜினி.
ஏ.சி.சண்முகத்தை வாழ்த்தும் விதமாக அவரது பேச்சு இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் பார்க்கப்பட்டது.