ரஜினிகாந்த் புதிதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் நுழைந்திருக்கிறார். இதுவரை ட்விட்டரில் மட்டுமே ரஜினிகாந்த் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை தீர்மானித்துவிட்டார். கூடவே அதற்கு சமூக வலைதளங்களை வெற்றிகரமாக பயன்படுத்தும் முடிவுக்கும் வந்துவிட்டார்.
ரஜினிகாந்த், 2014-ம் ஆண்டு முதல் ட்விட்டர் தளத்தில் இயங்குகிறார். அதில் பெரும்பாலும் தனது திரைப்படங்கள் தொடர்பான ‘புரொமோ’க்களையே ரஜினி மேற்கொண்டு வந்திருக்கிறார். மிக அபூர்வமாக அரசியல் அல்லது பொது விஷயங்களை பதிவு செய்து வந்திருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாகும் சூழலில், அனைத்து சமூக வலைதளங்களையும் பயன்படுத்த தயாராகிவிட்டார். அந்த அடிப்படையிலேயே முதல் முறையாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களிலும் தனது கணக்கை தொடங்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த், நீல வண்ண ‘க்ளிக்’ மூலமாக அந்த கணக்குகள் தனக்கானவை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஃபேஸ்புக்கில், ‘வணக்கம்’ என முதல் பதிவை இட்டிருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முதல் பதிவில், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அவரது கபாலி படத்தின் ‘ஸ்டில்’லை வெளியிட்டு ‘வந்துட்டேன்னு சொல்லு’ எனகிற பஞ்ச் டயலாக்கையும் இணைத்திருக்கிறார்.
ரஜினிகாந்த் தனது அரசியல் என்ட்ரியை உணர்த்தும் வகையிலும் இந்த ‘டயலாக்’கை சேர்த்திருப்பதாக அவரது மன்றத்தினர் கூறுகிறார்கள். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தக் கட்டுரை பதிவாகும் வேளையில் 14,000 ‘ஃபாலோயர்கள்’ இணைந்துவிட்டார்கள். அதேபோல அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ‘லைக்’ செய்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது.
சினிமா மற்றும் அரசியலில் ரஜினிகாந்தின் போட்டியாளரான கமல்ஹாசன் ஏற்கனவே ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இன்னும் கமல்ஹாசன் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.