தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை அளித்தார்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினி சந்தித்த போது, சில கேள்விகளால் கோபமடைந்து ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது, பத்திரிக்கையாளர்களை அவர் அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் அதற்கு வருத்தம் தெரிவித்து தற்போது ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.