தஞ்சையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில், ரஜினிகாந்த் ரசிகர்களிடம் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் உரையாற்றினார்.
அப்போது ரஜினி பேசியதாவது, "தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம், ஆனால், இது மிகக் கடுமையான வேலை. ஆனால், ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். நாம் ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாடாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்களாம். நம்முடைய இதயத்தை, எண்ணத்தை நான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பொதுநலம். சுயநலமல்ல... எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
மற்ற மாநிலங்களை தமிழகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டும். அதை நாம் சாதித்து காட்ட வேண்டும். ஆண்டவன் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று ரசிகர்களிடம் ரஜினி உரையாற்றினார்.
முன்னதாக நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், "தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. நல்ல தலைமை இல்லை. அதனால் தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.