/tamil-ie/media/media_files/uploads/2018/02/a425.jpg)
நடிகர் ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தனிக்கட்சித் தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடப் போவதாக ரஜினி தெரிவித்தார். அதற்கு மறுநாளே, புத்தாண்டு அன்று, ரஜினி மக்கள் மன்றத்திற்கென புதிய வெப்சைட்டை ரஜினி அறிமுகம் செய்தார். தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் மன்றங்களுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் ரஜினி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் வேலூர்,நெல்லை மாவட்டத்தில் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மேலும், ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கான 6 பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த திங்களன்று, 19.02.2018, நடைபெற்ற புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதன் மாநில நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மாநில அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில நிர்வாகிகளாக கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கின்றோம்.
மாநில பொறுப்பாளர் - ரஜினி சங்கர்
மாநில செயலாளர் - பிரபாகர்
மாநில இணைச் செயலாளர் - ஜோதி
மாநில துணைச் செயலாளர்கள் - யுவராஜ், காத்தவராயன், நெப்போலியன்.
மாநில இளைஞர் அணி செயலாளர் - காமராஜ்
மாநில செய்தித் தொடர்பாளர் - தாரகை ராஜா.
மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மக்கள் மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.