முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று வந்த நளின் உள்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்பர் 11) விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதற்கு ஆளும் தி.மு.க உள்பட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தீர்ப்பை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், ஆட்சியில் இருக்கும்போதும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது. நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, முதன்முதலில் 2000-ம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். அதன்பிறகு இவர்கள் அனைவரின் விடுதலையையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் அழுத்தம் கொடுத்தது. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை மற்றும் மனிதநேயத்தின் பக்கமாக நின்று நீதிமன்றத்திலும் வாதாடியும் போராடியும் வந்தோம்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கும் முடிவுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் தலையிட முடியாது என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் உறுதி செய்துள்ளது. நியமன பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கும் முடிவுகளில் தலையிட முடியாது என்பதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பே ஆதாரம். இந்த தீர்ப்பு ஜனநாயக கொள்கைகளுக்கு ஒரு வரலாற்று முன்னுரையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. காலதாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். பலரின் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் ஆளுநரே விடுதலை செய்திருக்கலாம். ஆனால் இந்த விவகாரம் கவனக்குறைவாக கையாளப்பட்டதாக நான் நம்புகிறேன். ஆளுநர், மத்திய அரசை விடுத்து உச்ச நீதிமன்றமே இறுதி முடிவை எடுத்துள்ளது என்றார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், "ஆளுநர்களின் மோதல் அணுகுமுறைக்கு இது சரியான பதில். இவர்கள் 30 ஆண்டுகள் இருளில் வாழ்ந்தனர். அதை திருப்பித் தர முடியுமா? தற்போது விடுதலை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“