Advertisment

ராஜீவ் கொலை கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர முடியாது : தமிழக அரசு அபிடவிட் தாக்கல்

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராஜீவ் கொலை கைதிகள் முன்கூட்டியே விடுதலை கோர முடியாது : தமிழக அரசு அபிடவிட் தாக்கல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் தங்களை முன்கூட்டி விடுதலை செய்யக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2011-ம் ஆண்டுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், இதுநாள் வரை விடுதலை செய்யப்படவில்லை. 14 ஆண்டுகள் சிறைக்காலம் கழித்த பல ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், தங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஏனெனில் இந்த வழக்கை மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ சிறப்பு குழு விசாரணை செய்தது. இதனால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், மாநில அரசு இந்த விசயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இதுதவிர ஏழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக, தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் தண்டனை பெற்ற மனுதாரர்கள் இருவரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ. செல்வம், பொன். கலையரசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட, இந்த இருவரின் ஆட்கொணர்வு வழக்கு மனுவுக்கு, அதே ஆண்டில் தமிழக அரசு பதில் மனு தயார் செய்துள்ளது. ஆனால் , இது நீதிமன்றத்தில் இது நாள் வரை தாக்கல் செய்யாமல், 2012 ல் தயார் செய்யப்பட்ட அந்த பதில் மனுவை, தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.

அப்போதைய, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்த ராஜகோபால் இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த சமயத்தில், இவ்விரு வழக்குகளும், தமிழக அரசுக்கு எதிராக மட்டுமே தொடரப்பட்டிருந்தது. அதனால், அப்போது தாக்கல் செய்த பதில் மனுவில், எதிர்மனுதாரர்கள் தரப்பில் தமிழக அரசு மட்டுமே சுட்டிகாட்டப்பட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதில் மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1998 ல் தான் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பார்த்தால், மனுதாரர்கள் இருவருக்கும், 2010 ஆம் ஆண்டுடன் 12 ஆண்டுகள்தான் முடிவடைந்தது. அந்த ஆண்டில் இந்த இருவரும் ஆலோசனை குழுவிடம் தாக்கல் செய்த முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது பரிசீலிக்க முகாந்திரம் இல்லை. ஏனெனில், 14 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதியை விடுதலை செய்வது குறித்து தான் ஆலோசனை குழு பரிசீலிக்க முடியும்.

மேலும், ஆலோசனை குழுவிடம் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக மனுதாரர்கள் கூறவில்லை என்று ஆலோசனை குழு அரசுக்கு கொடுத்த அறிக்கையில் கூறியிருந்தது. எனவே, இந்த இருவரின் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கும்படி அரசுக்கு ஆலோசனை குழு பரிந்துரை செய்யவில்லை. இதனால், இந்த இருவரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது.

ஆயுள் தண்டனை என்பது, வாழ்நாள் சிறையாகும் என்பதை உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது. சிறை நன்னடத்தை விதிப்படி, சிறை வாசிகள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே, ஒருவரின் தண்டனை குறைப்பு பற்றி ஆலோசனை குழு பரிசீலிக்கிறது. அந்த வரையறைக்குள்ளும் மனுதாரர்கள் வரவில்லை. எனவே, இந்த இருவரையும் முன் கூட்டியே விடுதலை செய்யமுடியாது என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் பதில் மனு தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, பதில் மனுவை, மனுதாரர்களுக்கு கொடுக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Madras High Court Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment