Rajnath Singh skips conferring doctorate to lyricist Vairamuthu : சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார் எஸ்.ஆர்.எம் நிறுவனர் பாரிவேந்தர். இதனை அறிந்த பாஜக ஐ.டி விங் பிரசிடெண்ட் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய விமர்சனங்கள் அடங்கிய தகவல்களை கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்.
கடந்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளிற்கு எதிராக விமர்சனம் ஒன்றை முன்வைத்தார் கவிஞர் வைரமுத்து. அதனைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள், மற்றும் வலது சாரி அமைப்புகள் தங்களின் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம், ஸ்ரீவில்லிப்புதூரில் பள்ளி கொண்டிருக்கும் ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் செய்திருந்த ஆராய்ச்சி குறித்து பேசிய அவர், ஆண்டாளை தேவதாசி என்று மேற்கொள் காட்டினார். இந்த செய்தி அடுத்த நாள் தமிழ் செய்தித்தாள்களில் வெளியானதைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராக பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
அமைச்சரின் வருகையை அறிந்த தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள், வைரமுத்துவின் கருத்து குறித்து அமைச்சரிடம் கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜ்நாத் சிங். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் வைரமுத்துவுக்கான கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரியவந்துள்ளது. பாஜக ஐ.டி. விங் மற்றும் பாஜக இளைஞரணியினர் தங்களின் கருத்துகளை கடிதம் மூலமாக ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பியதன் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் அறிவிக்கின்றனர்.
மேலும் படிக்க : அமெரிக்காவுல இருக்க ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி