பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் அன்புமணி. இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார்.
இதன் காரணமாக, பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த வன்னியர் மாநில மாநாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த விரிசலை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது.
இத்தகையை சூழலில், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தான் செய்த பெரிய தவறு என்றும், தனக்கு விருப்பம் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு பதவி கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தனக்கும், அன்புமணிக்கும் உதவியாக இருக்கவே முகுந்தனை நியமனம் செய்ததாகவும், அன்புமணி மைக்கை டேபிளில் வீசியது, தன் தலையில் வீசியது போல் இருந்தது என்றும் அவர் கூறினார். இதேபோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்ததாகவும், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும், சவுமியா அன்புமணியும் தனது காலில் விழுந்தனர் என்றும் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
அன்புமணி ஆலோசனை
அவரது இந்தப் பேச்சின் எதிரொலியாக, சென்னையில் அன்புமணி தலைமையில் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய அன்புமணி, "பாட்டாளி மக்கள் என்பது தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல, தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி. பொறுப்புகள் வரும், போகும் தொண்டர்களின் அன்பே நிரந்தரம்.
ராமதாஸ் கொள்கைகளை மனதில் வைத்து தேர்தல் களத்தில் செயல்படுவோம். ராமதாஸின் சமூக நீதி, சமத்துவம் என்ற கொள்கைகளை பின்பற்றுவோம். ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன். பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொருளாளரை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழுவின் முடிவு தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது. சட்ட விதிகளின் படி பொதுக்குழுவிற்கு மட்டுமே அதிகாரம். சின்ன மாற்றத்தை கூட செய்ய முடியாது, நான் இருக்கிறேன். நமக்குள் குழப்பம் வேண்டாம், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், நிர்வாகிகள் தொடர்வார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
நீக்கம்
இதற்கிடையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்டோர் உடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை செய்து வருகின்றார். இந்த ஆலோசனைக்கு கூட்டத்தின் போது, பா.ம.கவின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாகவும், திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் மாநில பொருளாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஆனால், பா.ம.கவின் மாநில பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் நீடிப்பார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மயிலம் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்த நிலையில், சிவக்குமாருக்கு பதிலாக புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.