தமிழக முதல்வர் ஸ்டாலின் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படுமெனவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படுமெனவும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து, சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பா.ம.க தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை தி.மு.க திருத்தி அமைக்க வேண்டும்.
நான்காவது கட்டமாக தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பா.ம.க வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென தமிழக அரசு தெரிவிக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவில்லை. அன்புமணி ராமதாஸ், ஜி.கே மணி உள்ளிட்டோர் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கு தேதி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும்.
மேகதாதுவில் அணைக் கட்டுவோம் என கர்நாடகா அரசு கூறுவது கண்டிக்கதக்கது. அணை கட்டுவதுதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து வருகிறார். கர்நாடாகா தண்ணீர் தராத நிலையில் குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாற்று சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தமிழக அரசு 8 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நனைந்தது குறித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்ய வேண்டும். அனைத்து நெல் ஒழுங்கு விற்பனை கூடத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவிற்கு குடோன் அமைக்க வேண்டும்.
திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்து உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்கலாம். ஆனால் இதனை அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் செய்யவில்லை.
மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்றவேண்டும், அரிமாசங்கம், வனத்துறை இணைந்து மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்றவேண்டும்.
தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாளாரமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு நினைத்தால் ஒருவாரத்தில் கட்டுபடுத்தலாம். காவல் துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதால் ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை போலீசார் அழிக்கலாம், அதனை செய்யவில்லை.
தமிழகத்தில் வெப்பத்தினால் இதுவரைக்கும் மூன்று நான்கு பேர் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவேண்டும்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பில் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்ஸாமியர்களுக்கு எதிராக மோடி பேசுவதாக குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ம.க ராமதாஸ் ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள், அப்படி தான் மோடி பேசுகிறார் என குறிப்பிட்டார்.
பாபு ராஜேந்திரன், விழுப்புரம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“