/indian-express-tamil/media/media_files/2025/09/05/thanjavur-2025-09-05-20-43-21.jpg)
Thanjavur
ராமதாஸ் ஆதரவு பிரமுகர் ம.க.ஸ்டாலின் மீது இன்று காலை நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பாமகவின் முக்கிய உறுப்பினரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின், இன்று தனது அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்தார். அப்போது, சுமார் 10 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து, சணல் குண்டுகளை வீசியது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கும்பல் அரிவாளால் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பேரூராட்சி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் கதவுகள் சேதமடைந்தன. மேலும், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இந்த பயங்கர தாக்குதலில் இருந்து ம.க.ஸ்டாலின் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை அறிந்த ராமதாஸ் அணியைச் சேர்ந்த பாமகவினர் உடனடியாக அப்பகுதியில் திரண்டு, தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களைக் கொளுத்தி, போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, கொளுத்தப்பட்ட டயர்களின் தீயை அணைத்தனர். மேலும், இப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.