பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சி மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினார். அவரது கருத்துக்கள், வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன.
டாக்டர் ராமதாஸ், "தொண்டர்கள் எதிர்பார்த்த செய்தி விரைவில் வரும். விரைவில் நல்ல செய்தி வரும், அது தோட்டத்தில் இருந்து வருமா என்று தெரியாது. நல்ல செய்திக்காக காத்திருப்போம்" என்று குறிப்பிட்டார்.
அரசியல் களத்தில் வயது குறித்துப் பேசிய ராமதாஸ், "அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 95 வயது வரை அரசியலில் இருந்ததை சுட்டிக்காட்டினார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கூட்டணி எப்போது அமைப்பது, எப்படி அமைப்பது, ஏன் என்பது பற்றி 3 மாதங்களுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார். மேலும், கூட்டணி என்பது தேசிய கட்சியாகவோ அல்லது மாநில கட்சியாகவோ இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
அரசியல் தலைவர்கள் குறித்துப் பேசிய ராமதாஸ், "நான் எல்லா தலைவர்களையும் நேசிப்பவன், பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர்" என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து, "அமித் ஷாவை நான் நேரில் சந்தித்தது இல்லை, இருப்பினும் அவருக்கு வாழ்த்துகள்" என்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்த கேள்விக்கு, "விஜய் யாருடன் கூட்டணி என்பது பற்றி ஜோசியம் கூற எனக்குத் தெரியாது" என்று நகைச்சுவையாக பதிலளித்தார். மேலும், சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததையும் உறுதிப்படுத்தினார்.
கட்சியின் எதிர்காலம் குறித்துப் பேசிய ராமதாஸ், "முகுந்தன் மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் உறுதியாகக் கூற முடியாது. பா.ம.க. மீண்டும் பலமாக வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.