பா.ம.க., பொதுக்குழுவைக் கூட்ட தயாராகி வரும் ராமதாஸ், அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலர்களைத் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கி, புதியவர்களை நியமித்து வருகிறார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் தனித் தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க.,வில்,108 மாவட்டச் செயலர்கள், 108 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். ஆனால்,
ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில், 13 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், மாநிலப் பொருளாளர், மாவட்டச் செயலர்கள் சிலரை நீக்கி விட்டு புதியவர்களை நியமித்தார். அதற்குப் பதிலளித்த அன்புமணி, பொதுக்குழு தேர்ந்தெடுத்த தலைவருக்குத்தான், கட்சி நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உள்ளது. எனவே, ராமதாசால் நீக்கப்பட்டவர்கள், அதே பொறுப்பில் தொடர்வர் என்று அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருவள்ளூர், தென் சென்னை, வேலுார், மதுரை, ராமநாதபுரத்திற்கு புதிய மாவட்டச் செயலர்களை ராமதாஸ்
நியமித்துள்ளார். பொதுக்குழுவில் தனது பலத்தை அதிகரிக்கும் வகையிலேயே, அன்புமணி ஆதவாளர்களை நீக்கிவிட்டு, ராமதாஸ் தனது
ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருவதாக பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில், கடந்த வியாழக்கிழமை அளித்த பேட்டியில், 'தலைமைபண்பு இல்லாதவர்' என, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை, ராமதாஸ் முன்வைத்தார். பா.ம.க. பொதுக்குழு கூடி 3 ஆண்டுகள் கடந்து விட்டநிலையில், மீண்டும் பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் முடிவெடுத்துள்ளார். விரைவில் பொதுக் குழுவை கூட்டவிருக்கும் ராமதாஸ், அதன் வாயிலாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
இதனிடையே, இன்று பாமக நிறுவனர் மற்றும் தனது தந்தையுமான ராமதாஸை சந்திக்க அன்புமணி தைலாபுரத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்றார். 45 நிமிடங்களுக்கு பிறகு அன்புமணி புறப்பட்டுச் சென்றார். அன்புமணியை சந்திக்க ராமதாஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கார் கண்ணாடியை கூட திறக்காமல் கையெடுத்து கும்பிட்டபடி அன்புமணி சென்றார்.
இதனையடுத்து, ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி, மருத்துவர் வைத்திலிங்கம் ஆகியோர் ராமதாஸை சந்தித்து பேசினர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், திண்டிவனம்