பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ஜூன் 7-ஆம் தேதி தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்தடைந்தார் ராமதாஸ். சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பா.ம.க-வில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக பேசியபோது,
“எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு ஏற்படும். அந்த தீர்வு நிச்சயமாக பாமகவுக்கும் இந்த நாட்டிற்கும் சரியான தீர்வாக இருக்கும். தீர்வு ஏற்படும்போது உங்களுக்கு நன்றி. ஏற்படும் தீர்வு நாட்டிற்கும், கட்சிக்கும் நல்லதாகவே இருக்கும். பா.ம.க. தொண்டர்கள் எப்போதும் என் பக்கம்தான். என்னை குலதெய்வமாக கடவுளாகப் பார்க்கக்கிறார்கள். அவர்கள்தான் எனது வழிகாட்டிகள். அவர்களின் முன்னேற்றத்திற்காக நான் எதையும் செய்வேன். கடந்த 2 நாட்களாக ஊடகவியலாளர்கள் கொடுத்த அன்புத் தொல்லைக்கு நன்றி என்று தெரிவித்தார். தொடர்ந்து, “2026-ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா?” என்ற கேள்விக்கு, “அதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது” என்றார்.