பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 24 புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அன்புமணி இன்று சோழிங்கநல்லூரில் 38 மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளார்.
அன்புமணி ராமதாஸ் குறித்து ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களை அன்புமணி நேரில் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்க இருக்கிறது.
இந்த சந்திப்பின்போது, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் சந்திக்க உள்ளார். 38 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் இந்த சந்திப்பில் கண்டிப்பாக பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், அவர்களுடன் ஆலோசனை நடத்தவும் இருக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அளித்த பேட்டியில்,, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம். பா.ஜ.க-வுடன் கூட்டணிவைக்கவேண்டும் என்று அன்புமணியும், சவுமியா அன்புமணியும் எனது காலில் விழுந்தனர். அவர்களால் தான் தோல்வி அடைந்தோம்" என்று கூறினார்.
ராமதாசின் இந்த பேச்சு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க கடசிகளின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியினர் பேசுகையில், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் உண்மையில் என்ன பிரச்சினை? எல்லோரும் நினைப்பது போல் இது வெறும் கூட்டணியோ அல்லது கட்சி பிரச்சினையோ மட்டுமல்ல? அதனை எல்லாம் தாண்டி வேறு இருக்கிறது. அதனை நாங்கள் பட்டியல் போட விரும்பவில்லை.
கடந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது. ஆனால் இப்போது அ.தி.மு.க.வுடன், பா.ஜனதாவும் கூட்டணி வைத்து விட்டது. இந்த 2 கட்சிகளும் ஒன்றாக இருக்கும்போது, ராமதாஸ் என்ன சொல்ல விரும்புகிறார்? அவர் மகன் பிரச்சினையை மகனிடம் பேசட்டும். அதில் அ.தி.மு.க.வையும், பா.ஜனதாவையும்இழுக்க வேண்டாம். இப்போது பா.ஜனதா இருக்கிறது. இனி அ.தி.மு.க. கூட்டணியில் சேர மாட்டாரா?" என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதேபோன்று டாக்டர் ராமதாஸ் 24 மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தைலாபுரம் தோட்டத்திலிருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பட்டியலை நேற்று இரவு தயார் செய்து விட்டதாகவும், இதில் கடலூர், மயிலாடுதுறை, மாயவரம், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - திண்டிவனம்.