இந்தியாவின் மீனவ சமூகத்திற்காக மத்திய அரசில் தனி மீன்வளத்துறை அமைக்கப்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாம்பன் நடுப்பாலத்தில் மீனவர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
மீன்வளத்துறை தனியாக இல்லாமல், விவசாயத்துறையின் கீழ் ஒருபகுதியாகவே மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகள் செயல்பட்டு வந்தன. இந்தியாவின் 12 கோடி மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும் தனி அமைச்சகம் தேவை என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, 2019ல் பிரதமர் மோடி மீன்வளத்துறையை தனியாக உருவாக்கி, அதற்காக தனி அமைச்சரை நியமித்தார். இதன் மூலம், மீனவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நேரடியாக கிடைக்கும் வகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சிறப்பான மாற்றத்திற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக, பாம்பன் வடக்கு கடற்கரையிலிருந்து மீனவர்கள் படகுகளில் தேசியக் கொடி மற்றும் மீன்பிடித் தொடர்பான கொடிகளை ஏந்தி, பாம்பன் நடுப்பாலத்திற்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி, வாழ்த்து தெரிவித்தனர்.
முன்பு இருந்த பழைய பாம்பன் பாலம் மூன்று மீட்டர் உயரம் மட்டுமே கொண்டதாக இருந்ததால், விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் படகுகளுக்கு கடந்து செல்ல சிக்கல்கள் ஏற்பட்டன. புதிய பாம்பன் பாலம் ஐந்து மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டதால், மீனவர்கள் எந்த தடையுமின்றி எளிதாக கடந்து செல்லும் வசதியை பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி, நாட்டுப்படகு சங்கத் தலைவர் ஜெரோமியாஸ் உள்ளிட்ட பல மீனவர்கள் கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.