/indian-express-tamil/media/media_files/2025/04/18/fCiX9lZ6mOciEKyY2Idk.jpg)
ராமேஸ்வரத்தில் பண மோசடி வழக்கில் செவன் ஹில்ஸ் சொகுசு ரிசார்ட் முடக்கபட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனை தொடர்கிறது.
நாடு முழுவதும் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகள் அரசியல் தலைவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரையும் பாதித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் சம்பந்தப்பட்ட வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
பண மோசடி வழக்கில் தற்போது டி.எம். டிரேடர்ஸ் மற்றும் கே.கே. டிரேடர்ஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள 'செவன் ஹில்ஸ்' என்ற பெயர் கொண்ட சொகுசு ரிசார்ட் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இந்த ரிசார்ட் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் கோல்கத்தா மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாம்பன் தீவில் அமைந்துள்ள இந்த சொகுசு ரிசார்ட்டில் உள்ள 60 அறைகள் மற்றும் அதனை சூழவுள்ள காலியிடங்களாக உள்ள நிலங்கள் என மொத்தம் ரூ.30 கோடி மதிப்புடைய அசையா சொத்துகள் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.