Amit Shah offers prayers at Ramanathaswamy temple Tamil News: அடுத்தாண்டில் (2024) நடைபெற உள்ள மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையினை நடத்துகிறார். இதன் தொடக்க விழா நேற்று இரவு ராமேஸ்வரத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியினை ஒட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
இதன்பின்னர், இரவு 8 மணிக்கு மேல் பொதுக்கூட்ட திடலின் முன் உள்ள சாலையில் பாதயாத்திரையை அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயில் வரை பாதையாத்திரை சென்ற அண்ணாமலை முதல் நாள் பாதயாத்திரையினை முடித்துக் கொண்டார். அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அமித் ஷா இரவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சாமி தரிசனம்
இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்த பின் முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் தனது வருகை குறித்து அமித் ஷா குறிப்பு எழுதினார். அமித் ஷா-வின் வருகையினை தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீ ராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது… pic.twitter.com/rmw3H3Rzch
— Amit Shah (@AmitShah) July 29, 2023
சாமி தரிசனத்தை முடித்த கையுடன் பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் தேசிய நினைவிடத்திற்கு செல்கிறார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்து பேசுகிறார். இதன்பிறகு, பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனவர் ஒருவரின் இல்லத்திற்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பாம்பன் குந்துகாலில் அமைந்துள்ள விவேகாநந்தர் நினைவு மண்டபத்தினை பார்வையிடுகிறார். இத்துடன் தனது ராமேஸ்வரம் பயணத்தை நிறைவு செய்யும் அமித் ஷா மண்டபம் சென்று அங்கிருந்து ஹெலிஹாப்டர் மூலம் மதுரை செல்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.