ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் பக்தர்கள் பாரம்பரிய தரிசனம் வழியில் தரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று ஆலய நுழைவு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ஏராளமான பொதுமக்கள் ஆலய நுழைவு போராட்டத்திற்கு வருகை தந்து கோயிலுக்குள் செல்ல முற்பட்டனர்.
அப்போது மேற்கு கோபுரம் வாசலில் போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, மேற்கு கோபுரம் வாசலுக்கு முன்பாக சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களை வாகனத்தில் தனியார் திருமண மண்டபத்திற்கு ஏற்றி சென்றனர். ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.