ராமராஜ்ய ரத யாத்திரை 2-ம் நாளாக இன்று தமிழ்நாட்டில் பயணிக்கிறது. எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக பலத்த பாதுகாப்புக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
ராமராஜ்ய ரத யாத்திரை, பிப்ரவரி 13-ம் தேதி அயோத்தியில் தொடங்கியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த யாத்திரை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வழையாக நேற்று தமிழ்நாட்டில் நுழைந்தது.
ரத யாத்திரை தமிழ்நாடு எல்லையான திருநெல்வேலி மாவட்டம், புளியரை பகுதிக்கு வந்ததுமே பதற்றம் பற்றிக் கொண்டது. காரணம், ஏனைய 5 மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் பயணித்த ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழ்நாட்டில் பாஜக.வுக்கு எதிரான அத்தனைக் கட்சிகளும் ஒருமித்து எதிர்ப்புக் குரல் கொடுத்ததுதான்!
ராமராஜ்ய ரத யாத்திரையை தடுத்து நிறுத்தக் கோரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். ஸ்டாலின் புகாருக்கு விளக்கமளித்த தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘மதப் பாகுபாடு இல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் தமிழ்நாட்டில் அனுமதி கொடுக்கப்படுகிறது. இதை அரசியல் ஆக்க வேண்டாம்’ என்றார். இதை ஏற்காமல் ஸ்டாலின் வெளிநடப்பு செய்து, பிறகு சாலையை மறித்து கைதானார்.
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, நாம் தமிழர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மறியல் செய்தன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை கடந்து நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தது ரத யாத்திரை.
ரத யாத்திரை மதுரையில் ஐயர் பங்களா பகுதியில் உள்ள ராமகிருஷண மடத்தில் இரவில் நிறுத்தப்பட்டது. இன்று காலை பாஜக தேசிய செயலாளர் தொடங்கி வைக்க, அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி ரதம் பயணப்படுகிறது.
மதியம் 12.00: ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று தமிழக பாஜக தலைவர் செளந்தரராஜன் கருத்து.
காலை 10.15 : மதுரை, ராமகிருஷ்ண மடத்தில் புறப்பட்ட ரதம், திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்தை அடைகிறது. மதுரையில் ஹெச்.ராஜா கொடியசைத்து ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.
காலை 10.00 : ரத யாத்திரைக்கு எதிராக இன்றும் போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு தொடர்கிறது. நேற்று வரை இப்படியொரு ரதம் தமிழ்நாட்டுக்கு வருவதே பெரும்பாலானர்வர்களுக்கு தெரியவில்லை. எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இப்போது ரதத்திற்கு வரவேற்பு கொடுக்கும் இந்து அமைப்பினரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
காலை 9.45 : பிப்ரவரி 13-ம் தேதி அயோத்தியில் தொடங்கிய ராமராஜ்ய ரத யாத்திரை, மார்ச் 25-ம் தேதி ராமேஸ்வரத்தில் முடிவதாக திட்டமிடப்பட்டது. அதாவது, மொத்தம் 41 நாட்கள் பயணம்! ஆனால் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே இன்று மாலையே ரத யாத்திரை ராமேஸ்வரத்தை அடைகிறது. அங்கு நாளை (மார்ச் 22) நிறைவு விழா நடைபெற இருக்கிறது.