கோவையில் ரம்ஜான் பண்டிகையொட்டி இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமிய மக்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்த பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
இந்த தொழுகையின் போது பெண்கள்,ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நாளை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்