தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரேஷன் பொருட்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்குவதற்கு பதில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு - 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு
இவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள் அரசு என்பவர் உயர் நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, வீடியோ கால் மூலம் விசாரணை செய்தது. தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், குடும்ப அட்டை இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இவை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பிட்ட காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காததாலும், சமூக விலகல் விதிகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை இவர்கள் அணுகுவது தேவையில்லாத அசவுகர்யத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய நீதிபதிகள், இவர்களுக்கான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்க உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக தனி பதிவேட்டை பராமரித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஏப்ரல் 9 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.