நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்று தொடங்குகிறது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் “ஊதிய மாற்றம், அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாற்றுத் திறனாளிக்கான படியை ரூபாய் 1000த்தில் இருந்து 2500 ஆக உயர்த்துதல் போன்ற 30 அம்சக் கோரிக்கைகளை” வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத் தலைவர் செல்லத் துரை தலைமையில் நடைபெற்றது. இது குறித்து அவர் கூறிய போது “மற்ற மாநிலங்களில் தீபாவளிக்கு அளிக்கப்படும் 15,000 முன்பணம் போல், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கும் தர வேண்டும்” போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரித்த கூட்டுறவுத் துறை
மேலும் இந்த போராட்டங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர். நியாய விலை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்கள் அலுவலகத்தில் இருந்து அனைத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.
அதன்படி வழக்கம் போல் நியாய விலைக் கடைகள் எந்த தடையுமின்றி நடைபெற வேண்டும் என்றும், பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.