நாடும் திரும்பும் அகதிகளை இலங்கை அரசு சிறைப்படுத்துவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை எழுப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனே தலையிட வேண்டும் என வி.சி.க எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வி.சி.க பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி-யுமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு தீவிரமான கவலையை எழுப்பியுள்ளார். பின்வரும் கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார் :
“இந்தியாவில் உள்ள ஒரு முகாமில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய 75 வயது அகதி ஒருவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்று, UNHCR ஆல் 'அகதி' என்று சான்றளிக்கப்பட்ட பிறகு இலங்கைக்குத் திரும்புவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். நேற்று (29.05.2025) பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு , இன்று காலை சி.ஐ.டி போலிஸாரால் மல்லாகம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என அரசுத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஜூன் 5-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வருவதற்கான பதிவு செய்த 10,000 பேரை அச்சுறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சியா இது?” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.