வானூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மொரட்டாண்டி வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு விழுப்புரம் இந்தியா கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் வாக்கைப் பதிவு செய்த செய்தார் அதன் பின்பு அவர் கூறியதாவது
நானும் மேலிடப் பொறுப்பாளர்கள் வன்னி அரசு, குணவழகன் ஆகியோரும் மரக்காணம் பேரூராட்சிக்குச் சென்று அங்கு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு வாக்குச்சாவடிகளையும், நகரப் பகுதியில் இருக்கும் இரண்டு வாக்குச் சாவடிகளையும் பார்வையிட்டோம். அதன் பின்னர், திண்டிவனம் நகரத்தில் புனித அன்னாள் மேல் நிலைப் பள்ளியில் மூன்று வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டோம். அதற்கடுத்ததாக சிங்கனூர் வாக்குச் சாவடிகள் மூன்றைப் பார்வையிட்டோம். அதன் பின்னர் விக்கிரவாண்டி நகரத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள மூன்று வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டு வாக்குப் பதிவு விவரங்களை அறிந்தோம். காலை 10.30 மணி வரை 20 முதல் 25 சதவீதம் வரை வாக்குப் பதிவாகியிருந்தது. எல்லா வாக்குச்சாவடிகளிலும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாகவும் சுறுசுறுப்பாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதைக் கண்டேன். வாக்குச் சாவடிகளில் ஒப்பீட்டளவில் பெண்கள் கூடுதலாக வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது.
வாக்கு சேகரிக்கச் சென்ற நேரத்திலும்கூட ஏராளமாகப் பெண்கள் திரண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் மகளிருக்கான நலத்திட்டங்கள் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன என்பதைத்தான் வாக்கு சேகரிப்பு நாளிலும், இன்று வாக்குச்சாவடிகளைப் பார்க்கும் போதும் உணர முடிந்தது.
தற்போது வாக்குப்பதிவு நடக்கும் வேகத்தைப் பார்க்கும் போது விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 80 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும் என ஊகிக்க முடிகிறது.‘ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு’ என்ற அரசியல் சமத்துவத்தை ஏற்படுத்தினார் புரட்சியாளர் அம்பேத்கர். ஆனால், தேர்தலில் பெறுகிற எல்லா வெற்றிக்கும் ஒரே மதிப்பு இல்லை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெறப்போகும் வெற்றியை எதிர்பார்த்து ' தமிழ்நாட்டின் சுமார் 100 ஆண்டு காலத் தேர்தல் அரசியல் வரலாற்றில் தலித் மக்களை முன்னிலைப்படுத்தும் கட்சி ஒன்றுக்கு இந்த முறை தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்கப் போகிறது' என்ற மகிழ்ச்சியில் கோடி இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. என்றார்.