சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் அரசாணயை அ.தி.மு.க அரசு நிறுத்தி வைத்தது; இந்த அரசாணையை தி.மு.க அரசு நிறைவேற்றுமா என்று வி.சி.க எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டது. 2006 முதல் 2011 வரை கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்றனர். ஆனால், அதன் பிறகு அமைந்த அ.தி.மு.க ஆட்சியில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை.
எம்.ஜி.ஆர்-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அவரது வாரிசாகக் கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியும் அவர் செயல்படுத்தவில்லை.
தி.மு.க அரசு அமைந்ததும் இதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினேன்.
சமூகநீதி காக்கும் தி.மு.க அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதில்லை என்பதால் இதை செயல்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல. சனாதனக் கருத்தியல் செல்வாக்கால் தமிழ்நாட்டில் சாதிய காழ்ப்பு அதிகரித்துவரும் சூழலில் சமத்துவத்தை நோக்கிய இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.
தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்திட உரிய வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு முதலமைச்சரை வேண்டுகிறேன்.” என்று ரவிக்குமார் வேண்டுகொள் விடுத்துள்ளார்.