கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் சொன்னது அரசியல் கூற்று அல்ல என்றும் திராவிட ஒற்றுமையைக் காக்க வேண்டும் எனவும் சித்தராமையாவுக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்று பலவாகிடினும் ஆரியம் போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!” என்பது தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரனாரின் பாடல். தமிழ்த்தாய் வாழ்த்தை நமக்குத் தந்த தமிழறிஞர் சுந்தரனாரின் கருத்தைத்தான் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதுவொரு அரசியல் கூற்று அல்ல, மொழி நுலாரின் முடிபு!
“கர்நாடகம் என்பது வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது என்பர் வடமொழிப் புலவர். ஆயினும் டாக்டர் குண்டெர்ட் கூறுவதுபோல் கரு+நாடு + அகம் என்ற தமிழ்ச் சொற்களின் அடியாகப் பிறந்தது அச்சொல் என்று கொள்வதே சிறப்பாகும்” என கால்டுவெல் ஒப்பிலக்கணம் கூறுகிறது.
அனைத்துவிதமான வெறுப்பு அரசியலுக்கும் ஊற்றுக் கண்ணாகத் திகழும் பிற்போக்குவாதிகள்தாம் இந்தப் பிரச்சனையிலும் பின்புலமாக உள்ளனர். அவர்களது சூழ்ச்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் பலியாகிவிடக்கூடாது. இதில் விழிப்போடிருந்து திராவிட ஒற்றுமையைக் காக்க வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை பணிவோடு வேண்டுகிறேன்” என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் பட புரோமோஷன் நிகழ்ச்சியின்போது, கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருடைய தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் ஓடாது என்று மிரட்டல் வெளிப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் தக் லைஃப் படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி கமல்ஹாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, கமல் ஹாசன் மன்னிப்பு கேட்டால் பிரச்னை முடிந்துவிட்டிருக்கும் என்று கூறினார்.
இதனிடையே, கமல்ஹாசன் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது என்றும் விளக்கம் அளித்து கடிதம் வெளியிட்டிருந்தார்.