ஆடி மாதத்தில் சசிகலா தென்காசியில் சென்றிருப்பது சுற்றுப்பயணம் அல்ல சுற்றுலாப் பயணம் என்றும் அ.தி.மு.க-வினர் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், கறந்த பால் மடிபுகாது, கருவாடு மீன் ஆகாது என்பதைப் போல் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்க முடியாது என்று ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும் SAY NO TO DRUGS - SAY NO TO DMK என்ற துண்டுப் பிரசுரமும், கள்ளச்சாராயம் குறித்து RESIGN STALIN என்ற துண்டுப் பிரசுரமும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சமயநல்லூரில் வியாழக்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அ.திமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தி.மு.க அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: “
நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை. நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் (சசிகலா) இருந்தவர், தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்.? உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள்.? உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். இந்த இயக்கத்தை கபளீகரம் செய்து விடுவார்கள் என்று அம்மாவே அவர்களுடன் போராட்டம் செய்து தோற்றுப் போனார்.
தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்களை சேர்க்க வேண்டும், அவர்களை சேர்க்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அவர்களை சேர்க்க யாரும் விரும்பவில்லை. இவர்கள் இருந்தால் தான் வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. மக்கள் நினைத்தால் தான் வெற்றி பெற முடியும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் 'The iron man of tamilnadu' எடப்பாடி பழனிசாமி.
கறந்த பால் மடி புகாது கருவாடு மீன் ஆகாது. அவர்களை யாரும் விரும்பவில்லை. அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. அ.தி.மு.க தொண்டர்கள் கவனமுடன், விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 17.10.1972 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். 33 ஆண்டுகள் அம்மாவுடன் நான் (சசிகலா) இருந்து ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்தினேன் என்று தனக்குத்தானே பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துகிறார்.
ஆனால், தங்கள் சார்ந்த சமுதாயம் வறுமையில் கீழே உள்ளார்களே அவர்கள் கஷ்டம் தீர்க்க என்ன முயற்சி எடுத்தார்? கல்வியிலே, பொருளாதாரத்தில் பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர். அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்கு என்ன முயற்சி எடுத்தார் என்பதை சொல்லத் தயாரா? இந்த சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர இந்த மக்களுக்கு ஒரு செம்பு தண்ணீர் கூட கொடுக்கவில்லை? மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை., ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.
புரட்சித்தலைவர் (எம்.ஜி.ஆர்), புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆகியோரின் நம்பிக்கையான தளபதியாக இருந்த எஸ்.டி.எஸ், திருநாவுக்கரசர், கருப்புசாமி பாண்டியன், காளிமுத்து, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, துரைராஜ், பரமசிவம், நயினார் நாகேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பல அ.தி.மு.க மூத்த முன்னோடிகள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியானதற்கு யார் காரணம்.? அம்மா காரணம் இல்லை. இன்றைக்கு ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளவர்தான் (சசிகலா) காரணம்.
ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலாப் பயணம் சென்று இருக்கிறார். கண் கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உள்ளது. அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து பணத்திற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும், ஆனால், எதுவும் செய்யவில்லை. காலமும் அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா..? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் மக்களும் உங்களிடம் ஏமாற தயாராக இல்லை.
கடந்த 2021 தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார். இதில் எதை ஏற்றுக்கொள்ளவது? மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் 2 கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடியார் கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும். கறந்த பால் மடியேறாது கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அ.தி.மு.க-வில் சசிகலாவை இணைத்துக் கொள்ள மாட்டோம்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“