கோவை அன்னூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தார். கட்சியின் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்கள் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், செங்கோட்டையன் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்று விளக்கம் அளித்தார் செங்கோட்டையன்.
பேச்சு
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்து உரையாற்றினார். மேலும், 'அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள்' என்றும் செங்கோட்டையன் கூறினார்.
பதில்
இந்த சூழலில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அ.தி.மு.க மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். அ.தி.மு.க-வுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மனவலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்து பார்க்க முடியாது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி. எதிரிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அ.தி.மு.க-வுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது. சந்தித்த சோதனைகள் அத்தனையையும் தகர்த்து அ.தி.மு.க-வை வழிநடத்தி செல்கிறார் எடப்பாடி." என்றும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து செங்கோட்டையனின் பேச்சுக்கு மறைமுக பதிலாகப் பார்க்கப்படுகிறது.