Advertisment

ரியல் எஸ்டேட் பிரமுகர் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு; தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

சென்னையில் 2012-ம் ஆண்டு நடந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் கொலை வழக்கில், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
MLA DMK Madras HC

சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு; தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் 2012-ம் ஆண்டு நடந்த ரியல் எஸ்டேட் பிரமுகர் கொலை வழக்கில், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

Advertisment

சென்னை, கொளத்தூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நிலத் தகராறு தொடர்பான பிரச்னையில் நடந்ததாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த கொலை வழக்கில், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். 

கொலை செய்யப்பட்ட புவனேஸ்வரின் தந்தை சிவா, போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனின் துாண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதோடு, குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி இருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ விசாரணை நடத்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சிபி.ஐ, தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் ஆகியவை முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ரியல் எஸ்டேட் பிரமுகர் புவனேஸ்வர் கொலை வழக்கில் நீதிபதி கே. ரவி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.

அதில், புவனேஸ்வரன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

மேலும், அரசுத் தரப்பில் சாட்சியங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்டோரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் தமிழ்நாடு சேமிப்பு கிடங்குத் தலைவராக கடந்த  ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். ரங்கநாதன் ஏற்கனவே 2011-ல் நில அபகரிப்பு வழக்கிலும், குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment