செம்மரம் கடத்தியதாக கைதான தமிழகத்தை சேர்ந்த நான்கு பேரை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்ணடியை சேர்ந்த சையது இப்ராகிம், ரவேல் குழந்தை ராஜா, நாகூர் கனி, முகமது இக்பால் ஆகியோர் செம்மரம் கடத்தியதாக ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்ட காவல் துறையினரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நால்வரையும் கைது செய்து ஆந்திர காவல்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்கக்கோரியும் சையது இப்ராகிமின் மனைவி சையது ராபியா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.