மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை, ஒரே ஆண்டில் 3-வது முறையாக கடந்த 31-ம் தேதி எட்டியது.
இதையடுத்து, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளால் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 5,000 கன அடியாகவும், நேற்றிரவு 8 மணிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையிலிருந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று விநாடிக்கு 1,871 கன அடியாக நீர்வரத்து, இன்று 1,992 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119.76 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியில் இருந்து 93.08 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்.