ஆர்.கே.நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது விதிமீறல் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம், கேளிக்கை என எந்த வடிவிலும் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வெற்றிவேல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை இன்று (செவ்வாய் கிழமை) பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்தியபடி பாடல் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் உள்ளது. தேர்தலுக்காக இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டதா என்ற கேள்விக்கு, “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பலர் அவதூறு பரப்பும் வகையில் பலரும் பேசி வருவதால் மனம் பொறுக்காமல் வீடியோவை வெளியிட்டேன்”, என வெற்றிவேல் கூறினார். வீடியோ வெளியிடுவது குறித்து டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு தெரியாது எனவும் கூறினார்.
இந்நிலையில், தேர்தலுக்கு ஒருநாள் முன்பு ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டது விதிமீறல் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜேஷ் லக்கானி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ”ஆர்.கே.நகரில் பிரச்சாரம் முடிந்த பிறகு வெளியிட்டது தேர்தல் விதிமீறல். வீடியோ வெளியிட்ட தொலைக்காட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் தேர்தல் விதிமீறல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்”, என தெரிவித்தார்.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை வெளியிட வெற்றிவேல் மறுத்துவிட்டார். தன்னிடம் மேலும் ஒரு வீடியோ உள்ளது எனவும், அதனை தேவை ஏற்படும்போது வெளியிடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அந்த வீடியோ அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்டதா அல்லது போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.