சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம், ரூ.734.91 கோடி மதிப்பில் மிகப்பெரிய மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக முதலில் 1, 2-வது நடைமேடைகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்டன. பின்னர் 3, 4-வது நடைமேடைகளும் மூடப்பட்டன. இதனால், எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 11 முதல் நவம்பர் 10 வரை, எழும்பூரில் இருந்து வழக்கமாகப் புறப்படும் மலைக்கோட்டை, சோழன், பாண்டியன் மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட தேதிகளில் இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், புறப்படும் இடமான தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.