குடியரசு தின விழா நாளை மறுநாள் (ஜனவரி 26) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை மத்திய ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாருடன் இணைந்து கோவை மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய், வெடிபொருள் கண்டறியும் நவீன கருவிகள் கொண்டு ரயில் தண்டவாளங்கள், நடைமேடைகள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தில் ரயில்வே துறை டி.எஸ்.பி பிரமோத் நாயர் தலைமையில் ரயில்வே காவல் ஆய்வாளர் சுனில் குமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக கோவை மத்திய ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள், , சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தலைவர்களின் சிலைகள் உள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினம் முடியும் வரை தொடர் சோதனைகள் நடைபெறும். கோவை மாநகரில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளில் பதிவேடு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. விடுதிகளில் பதிவேடு பராமரிக்கவில்லை என்றாலோ அங்கு தங்கும் நபர்கள் குறித்து பதிவு செய்யவில்லை என்றாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகர் முழுவதும் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கைகளும் நடைபெற்று வருகிறது ” எனக் கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/