குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை எதிர்பார்த்து பலரும் போதிய ஆவணங்கள் இல்லாமல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதால், ஆன்லைனில் பல ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதனால், ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பதைத் தடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்காக, தகுதியான குடும்ப அட்டைதாரர்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதனால், தமிழகத்தில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கும் பலரும் திருமணமாணவர்கள் கூட்டுக் குடும்ப ரேஷட் அட்டையில் இருந்து பெயர்களை நீக்கி தனி ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்பதால் பலரும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பிப்பதால் பல விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களின் ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உணவுப் பொருள் வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகவே சரிபார்த்து வீடுகளுக்கு நேராக சென்று ஆய்வு செய்ய களப்பணியாளர்களை அனுப்பி வைப்பார்கள்.
களப் பணியாளக்ரள் விண்ணப்பதாரர் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று ஆய்வு செய்து புதிய ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வார்கள். ஆனால், தற்போது நிறைய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் போதிய ஆவணங்கள் இல்லாமல் ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுகின்றன.
இதனால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பம் ரத்தாவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்ய புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவரு கூறுகையில், “ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு விண்ணப்பம் இதுவரை நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் இனி ரேஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்யப்படாது.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"