ரேஷனில் 20 கிலோ புழுங்கல் அரிசிக்கு பதிலாக இனி 14 கிலோதான் வழங்கப்படும். மீதியை பச்சரிசியாக வழங்க அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உணவுப் பொருள் வினியோகத்தில் அரசு பொது வினியோகத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதை வைத்தே ஒரு ஆட்சியை சாதாரண மக்கள் எடை போடுவார்கள். எனவே எந்த ஆட்சியாக இருந்தாலும், ரேஷன் பொருட்களின் விலையிலோ அளவிலோ கை வைக்கத் தயங்குவர்.
இந்த சூட்சுமத்தை புரிந்தே முந்தைய திமுக ஆட்சியில் அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு கருணாநிதி வழங்கினார். அதாவது, எந்த வருமான வரம்பும் இல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ அரிசியை 20 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அந்த விலையையும் நீக்கி விலையில்லா அரிசி வழங்கினார்.
அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களும் மாதம் 20 கிலோ புழுங்கல் அரிசியை இலவசமாக பெற்று வருகிறார்கள். ஆனால் அண்மையில் உணவு வழங்கல் துறை சார்பில் மாவட்ட உணவு கிடங்கு பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கை இதற்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது.
அந்த சுற்றறிக்கையில், ‘மத்திய் அரசின் உணவுக் கிடங்கில் இருந்து 70 சதவிகிதம் புழுங்கல் அரிசி, 30 சதவிகிதம் பச்சரிசி என்ற வகையிலேயே பங்கிட்டு தருகிறார்கள். அந்த விகிதப்படி பயனாளர்களுக்கு 70 : 30 என்ற விகிதப்படி புழுங்கல் அரிசியையும் பச்சரிசியையும் வழங்கவேண்டும்’ என கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தவிர, மாவட்ட உணவு வழங்கல் அலுவலர்களுக்கும் இது தொடர்பாக தகவல் இல்லை. ஆனாலும் இந்த சுற்றறிக்கையை கடைபிடிக்க வேண்டிய நெருக்கடியில் மாவட்ட உணவு கிடங்கு பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். எனவே இனி 20 கிலோ புழுங்கல் அரிசிக்கு பதிலாக 14 கிலோ மட்டுமே புழுங்கல் அரிசி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மீதி 7 கிலோவை பச்சரிசியாக பெற்றுக்கொள்ளலாம்.
அண்மையில் ரேஷனில் சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியது. அதைக் கண்டித்து இன்று(22-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக போராட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து உளுந்தம் பருப்பு கொள்முதலை அரசு நிறுத்திவிட்டதாக உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். அதன்படி உளுந்தம் பருப்பு வினியோகமும் நின்றுவிட்டதாக புரிந்துகொள்ள முடியும்.
3-வது அடியாக இப்போது மக்கள் சாப்பிடும் புழுங்கல் அரிசியில் அரசு கை வைத்திருக்கிறது. பல்வேறு மட்டங்களிலும் இந்த அறிவிப்பின் தாக்கம் கடும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.