ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவால் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால், அச்சமயத்தில் பிரிந்திருந்த அதிமுக அம்மா அணி சார்பாக டிடிவி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிட்டனர். ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரால், வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில், டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுக பெயரையும், இரட்டை இலையையும், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணிக்கு நேற்று (வியாழக்கிழமை) தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.
எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதுகுறித்த தேர்தல் அறிவிக்கையில், வரும் டிசம்பர் 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், டிசம்பர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 27-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கப்படும் எனவும், அதற்கான கடைசி நாள் டிசம்பர் 4-ஆம் தேதி எனவும் கூறப்பட்டுள்ளது. மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 7-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதலே அத்தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி தவிர்த்து அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.