தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையிட்டது.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால், காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக சார்பில், டிடிவி.தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷூம், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டியிட்டனர். அவர்களோடு 62 பேர் களத்தில் இருந்தனர்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஏப்ரல் 10ம் தேதி தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் 35 இடங்களில் ரெய்டு நடத்தினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. ரூ.89 கோடி செலவு செய்ததற்கான ஆதாரங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரையில் தேர்தல் நடத்தப்படாததால், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோர்ட்டில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இத்தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மருது கணேஷும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த இரண்டு வழக்குகளையும் விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்
பெஞ்ச்சில் இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் இன்று காலை முறையிட்டார். இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால்தான், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்விரு வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.