/tamil-ie/media/media_files/uploads/2017/11/IMG-20171127-WA0018.jpg)
ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் அரசியல் கட்சியினர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் ஜெயித்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. திமுக சார்பில் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மீண்டும் போட்டியில் இறங்குகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை களம் இறங்கிய கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் இன்று (நவம்பர் 27) தொடங்கியது.
சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் முதல் வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜனும் மனு தாக்கல் செய்தார்.
தண்டையார்பேட்டையிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இன்று மட்டும் மொத்தம் 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.
மனுத்தாக்கல் செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசிநாள். வேட்புமனு தாக்கலுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மனுத்தாக்கல் செய்ய வருவோர், கார்களில் அணிவகுத்து வரக்கூடாது. 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தலை நடத்தும் அலுவலர் வேலுச்சாமி அறிவித்து உள்ளார். முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.