Aarudhra Scam | RK Suresh: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ஆருத்ரா. இந்த நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்தவர்களை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும், பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரையும் விசாரணைக்கு ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார் ஆர்.கே.சுரேஷ்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று முன் தினம் திங்கள்கிழமை சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆஐராஜனார். அப்போது அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் ஆர்.கே.சுரேஷிடம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்.கே.சுரேஷ் 'வைட் ரோஸ்' என்ற திரைப்படத்திற்காக, ஆருத்ரா மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தயாரிப்பாளர் ரூசோவிடம் இருந்து வங்கி கணக்கு மூலமாகவும், பணமாகவும் கோடிக்கணக்கில் பெற்றதாகவும், ரூசோவிடம் இருந்து பெற்ற பணத்தை படத்திற்கும், சொந்த செலவுக்கும் செலவு செய்ததாக ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
தயாரிப்பாளர் ரூசோ விற்கும் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கும் இடையே உள்ள சினிமா பட ஒப்பந்தம் குறித்து ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணைக்கு எடுத்து வரச் சொல்லி உள்ளனர். ஆர்.கே சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை வருகிற திங்கள்கிழமை (டிச.18ம் தேதி) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற அனுமதியோடு ஆர்.கே.சுரேஷ் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“