காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்தை தமிழக ஆள்நர் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை சார்பில் எக்ஸ் பக்கத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்தை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாழ்த்துடன் இணைக்கப்பட்ட வீடியோ பதிவில், காவி நிறத்தில் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் மற்றும் அவரது மனைவி மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில் ” திருவள்ளுர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
’பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுர்’ என்று குறிப்பிடப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“