/indian-express-tamil/media/media_files/2024/11/23/OIuD0q1qK0MkbVSLyvN9.jpg)
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை, நூலகம் மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருவின் தொகுதி அலுவலகம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
இதற்காக இன்று மாலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தியாகராஜன், மேற்கு மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
துணை முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி முதல் துறையூர் வரை சாலை இருபுறமும் கொடி, தோரணங்கள் பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையில் உள்ள வேகத்தடைக்கு இன்று காலை வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் உள்ள வேகத்தடைகளின் வெள்ளை தீட்டாமல் பல நாட்களாக இருந்ததால் விபத்துகள் அவ்வபோது ஏற்பட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் இன்று தமிழ்நாடு துணை முதல்வர் வருகையொட்டி அதிகாரிகள் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை தீட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சாலையில் இருபுறமும் உள்ள புதர் போல இருந்த புட்களை வெட்டும் பணியையும் பணியாளர்கள் மேற்கொண்டனர். துணை முதல்வர் வருகைக்காக செய்யப்படும் இந்த பணிகள் மற்ற நாட்களில் ஏன் செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.