புதுவை அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் கொள்ளை: தமிழகத்தில் பதுங்கி இருந்த கும்பல் கைது

அ.தி.மு.க பிரமுகர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 38 லட்சம் பணம், 82 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

express photo
அதிமுக நிர்வாகி வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றவர்களை காவல்துறை கைது செய்தனர்.

அதிமுக நிர்வாகி வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றவர்களை, ஸ்கெட்ச் போட்டு கூண்டோடு பத்து பேரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 57), அதிமுக நிர்வாகி ஆவார். இவர் 19-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 3 நபர்கள் அவரிடம் ஒரு முகவரியை கேட்பது போன்று விசாரித்தனர். அதற்கு கருணாநிதி பதிலளித்த போது, 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து, அவரது வீட்டின் முதல் மாடிக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவரை மிரட்டி, வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 38 லட்சம் பணம், 82 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

தகவலறிந்த கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங், பெரியகடை காவல் ஆய்வாளர் நாகராஜ், உதவி காவல் ஆய்வாளர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.

தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவரின் முகம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் 26 வயதான கிருஷ்ணகுமார் என்பவர் கொள்ளையர்களின் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்திய போலீசார், கிருஷ்ணகுமார் மீது ஏற்கனவே 3 கொலை வழக்கு உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் கருணாநிதியிடம் பணம் அதிகமாக இருப்பதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள ரியாஸ் என்பவர் கிருஷ்ணகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 2 மாதமாக கொள்ளையடிக்க திட்டமிட்டு கருணாநிதியை பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறுகின்றனர். இதன்பின் கொள்ளையர்கள் ஒன்றாக அமர்ந்து மதுஅருந்தி திட்டம் தீட்டி, சம்பவத்தன்று முகவரி விசாரிப்பது போல விசாரித்து, பின் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையை அரங்கேற்றி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முதுநிலை கண்காணிப்பாளர் நாரா சைதன்யா தலைமையில் 2 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் இடங்களில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான கிருஷ்ணகுமார், வெற்றிவேல், மார்க்கெட் கார்த்திக், மெக்கானிக் கார்த்தி, சையது ரியாஸ், ஆனந்து, ஸ்டாலின், முகமது ஆசிக் அலி, ஜான், மணி ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் ரொக்கம், ஒரு இண்டிகா கார், 24 சவரன் செயின், மோதிரம் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள், 6 செல்போன், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Robbery at the house of admk leader in puducherry 10 got arrested

Exit mobile version